Tuesday, May 31, 2011

அரசியலுக்கு ஆயத்தமாகிறாரா விஜய்?

'காவலன்' பட பிரச்னைகள் ஆரம்பித்த உடனே தனது ஆதரவு அ.தி.மு.கவுக்கு தான் என்று வெளிப்படையாக அறிவித்தவர் விஜய்.  ஆனால் யாரால் பிரச்னை என்பதை அவர் இன்று வரை தெளிவு படுத்தவே இல்லை.

பிரச்சார சமயத்தில் 'வேலாயுதம்' படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவருக்கு பதிலாக அ.தி.மு.கவிற்கு ஆதரவாக தீவிரமாக  இவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பிரச்சாரம் செய்தார்.

அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றவுடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விஜய். இதனால் விஜய் அ.தி.மு.கவில் சேர்வார் என்ற தகவல்கள் வலம் வர ஆரம்பித்தன.

தனது மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு அறிக்கை மூலம் நன்றி தெரிவித்த விஜய் அதன்பின் தனது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இந்நிலையில் 29ம் தேதி தனது சங்கீதா திருமண மண்டபத்தில் நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்தார் விஜய்.  அவர்களிடையே "ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, உங்களது கடுமையான உழைப்பை பாராட்டியபோது எனக்கு பெருமையாக இருந்தது " என்று கூறினார்.

அரசியலில் ஈடுபட இது சரியான தருணம் இல்லை என்று கூறி வந்த விஜய் இப்போது தங்களை அழைத்து இவ்வாறு பேசியதால் கூடிய விரைவில் விஜய் நேரடியாக அரசியலில் ஈடுபடுவார் என்று கூறி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment