Sunday, January 30, 2011

குழப்பம் தீர்ந்தது `3 இடியட்ஸ்’ படத்தில், மீண்டும் விஜய்! சூர்யா நடிக்கவில்லை

வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தி படம், `3 இடியட்ஸ்.’ இந்த படத்தில் அமீர்கான், மாதவன், சர்மான்ஜோஷி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள்.
இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். படத்துக்கு, `மூவர்’ என்று பெயர் சூட்டலாமா? என்று யோசித்து வருகிறார்கள். அமீர்கான் நடித்த வேடத்துக்கு முதலில் விஜய் பேசப்பட்டார். பின்னர், விஜய் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. அவருக்கு பதில், சூர்யா நடிப்பார் என்று பேசப்பட்டது. இப்போது, மீண்டும் விஜய்யே அந்த படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் `3 இடியட்ஸ்’ படத்தின் கதாநாயகன் யார்? என்ற குழப்பம் தீர்ந்தது. இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய வேடத்தில், சத்யராஜ் நடிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூன்று பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும், நண்பர்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார். படிப்பை முடித்து வேலைகளில் சேர்ந்த மற்ற இரண்டு நண்பர்களும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே `3 இடியட்ஸ்’ படத்தின் கதை!

0 comments:

Post a Comment