Wednesday, February 23, 2011

விஜயினது உரை

தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும் என்று நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலைக் கண்டித்து நேற்று நாகையில் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்திருந்தது.
இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். இதனால் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் சேர்ந்து விட்டது. ஆனால் தொடர்ந்து மழையும், கடும் காற்றுமாக இருந்ததால் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டது. போராட்டத்தைத் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதனால் மழையில் காத்திருந்த ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்துவதாக கூறி போலீஸார் திடீரென தடியடியில் இறங்கினர். இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த விஜய் கோபமடைந்தார். அந்த இடத்திலிருந்து திடீரென அவர் வெளியேறிச் சென்றார்.
பின்னர் மீண்டும் வந்த அவர் ரசிகர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது:
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனை.
கடந்த சில ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் சுமார் 540 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,100-க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டவர்கள். அண்மையில், இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் சுருக்கிட்டு இலங்கைக் கடற்படையினர் கொலை செய்தனர் என்பதை அறியும்போது, இலங்கை ராணுவத்தினர் மனிதர்களா அல்லது அரக்கர்களா என்று நினைக்கத் தோன்றுகிறது.
கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு வந்தோம், சென்றோம் என ரசிகர்கள் இருந்து விடக் கூடாது. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சேவையை செய்ய உறுதியேற்க வேண்டும். அனைவரும், தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும்.
மீனவர்கள் மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. மீனவர்கள் மீது விழும் அடிகளை என் மீது விழுந்த அடிகளாகக் கருதிப் போராடுவேன் என்றார் விஜய்.
போராட்டத்தின்போது சமீபத்தில் இலங்கைக் கடற்படையில் கொல்லப்பட்ட மீனவர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியன் ஆகியோரது குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 50,000 நிதியுதவியையும் வழங்கினார். 7 மீனவர்களுக்கு மீன் பிடி வலைகளையும் வழங்கினார்.
போராட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்கக் கெளரவத் தலைவரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் போராட்டத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.
தனது பேச்சின்போது மறைந்த பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மெளனமாக இருக்கும்படி அனைவரையும் விஜய் கேட்டுக் கொள்ள அதன்படி அனைவரும் எழுந்து நின்று மெளனம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்தினர்

0 comments:

Post a Comment