Wednesday, December 15, 2010

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர்கள் இல்லை!!

விஜய் நடிக்க வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவர் சந்தித்திராத நெருக்கடியை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
அசினுடன் அவர் நடித்துள்ள காவலன் திரைப்படம், எல்லாம் முடிந்த பிறகும் கூட ரிலீசுக்கு வழியில்லாமல் தவிக்கிறது. இதுவரை மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்ட்டு, தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப் போடப்பட்டது காவலன்.
கடைசியாக டிசம்பர் 17 என நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதிக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் என்றும், அப்படியே கிடைத்தாலும் அடுத்த வாரம் மன்மதன் அம்பு வெளியாகும்போது தூக்கிவிட வேண்டும் என்றும் நிர்பந்திக்க டென்ஷனான விஜய், படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைத்து விட்டார்.
இப்போது பொங்கலுக்கும் கூட இந்தப்படத்துக்கு நல்ல தியேட்டர்கள் தரமுடியாது என்றும் ஏதாவது மூன்றாம் தர திரையரங்குகள்தான் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏன்?
காரணம், பொங்கலுக்கு கருணாநிதியின் இளைஞன், சன் பிக்ஸர்ஸின் ஆடுகளம், க்ளவுட் நைன் புரொடக்ஷன்ஸின் சிறுத்தை ஆகிய படங்கள் வெளியாகின்றன. இளைஞன் படத்தை உதயநிதி ஸ்டாலின் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார். முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டுள்ளார்.
அடுத்து, ஆடுகளத்தை சன் பிக்ஸர்ஸ் ரிலீஸ் செய்கிறார்கள். விஜய் படம் தயாராகும் முன்பே ஆடுகளத்துக்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மூன்றாவது படமான சிறுத்தையை முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் வெளியிடுகிறது. இந்த நிறுவனமும் முன்கூட்டியே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மன்மதன் அம்பு உள்ளிட்ட மேற்கண்ட படங்களுக்காக நிறைய தியேட்டர்கள் புக் ஆகி விட்டதாக கூறப்பட்டாலும் கூட, காவலனுக்கு தியேட்டர் கிடைக்காமல் போயிருப்பதற்கு ‘உண்மை’யான காரணம் என்ன என்பது மற்றவர்களை விட திரையுலகினருக்கு மிக நன்றாகவேத் தெரியும். இருந்தாலும் வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு அவர்களை ஏதோ ஒரு ‘பாசவலை’ கட்டிப் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிங்கம் வேட்டையாடிய இறையின் மிச்சம் கிடப்பதைப் போல, இந்த மூன்று பெரிய நிறுவனங்களின் படங்களுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதியிருந்தால் அது காவலனுக்கு தரப்படும் என்கிறார்கள் எக்ஸிபிட்டர்ஸ் வட்டாரத்தில்.
“ஒருவேளை இப்போது, அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் மன்மதன் அம்பு பொங்கல் நேரத்திலும் ஓடிக் கொண்டிருந்தால், காவலன் ரிலீஸ் பற்றி விஜய் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே…”, என்கிறார்கள்.
தன்னைச் சுற்றிலும் கணக்காக ‘ஆப்பு’ வைத்து விட்டார்கள் என்பதை உணர்ந்துள்ள விஜய், தற்போது அதிமுக ஆதரவுப் பிரமுகர்களிடம் உள்ள தியேட்டர்கள் குறித்துக் கணக்குப் போட்டுப் பார்த்துள்ளார். அது கிட்டத்தட்ட 120க்கும் அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கெல்லாம் காவலனை திரையிட அவர் முயற்சிகளை தொடங்கியுள்ளாராம்.

0 comments:

Post a Comment