Friday, January 13, 2012

நண்பன் – திரை விமர்சனம்


நடிப்பு: விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா
இயக்கம்: ஷங்கர்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு: ஜெமினி நிறுவனம்
நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில நிச்சயமா ஜெயிப்பீங்க என்பதுதான். வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை மூன்று மணிநேரத்தில் சொல்லிவிட்டுப் போகிறது நண்பன்.
ஏற்கனவே வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பாப்பு இருந்தது அதை அதிகமாகவே நிறைவேற்றியிருக்கிறது நண்பன்.
என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் உடன் கல்லூரியில் வந்து சேர்ந்து படிக்கிறார் விஜய். மூன்றுபேரும் நல்ல நண்பர்களாகிவிடுகிறார்கள். கல்லூரியில் படித்து முடித்து ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் நண்பன் விஜய் பற்றி எந்த தகவலும் இல்லை. சில வருடங்கள் கழித்து நண்பனை (விஜய்) தேடி அவனது ஊருக்குப் போகிறார்கள். அங்கு போய் பார்த்தால், அங்கு அவனுக்கு பதிலாக வேறு ஆள் (எஸ்.ஜெ.சூர்யா) இருக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
படம் முடிந்து வெளியே வந்தாலும் நம் நினைவுக்கு வருவது நாம் பார்த்தது விஜய் படம்தானா என்ற எண்ணம்தான்? இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களில் எல்லாம் விஜய் அறிமுகமாகும்போதே தாரை தப்பட்டை முழங்கும். பூ மழை பொழியும். இப்படித்தான் இருக்கும் விஜய்யின் அறிமுகக்காட்சிகள். இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. படத்தில் நடித்த எல்லோருமே ஒரு கேரக்டராகத்தான் வந்து போகிறார்கள். பஞ்சவன் பாரிவேந்தனாக வரும் விஜய்யை பார்த்தவுடனே நமக்குப் பிடித்துப் போகிறது. கல்லூரியில் சொல்லித் தருவதெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையான அறிவு சார்ந்த விஷயம் அல்ல… எல்லாம் வேலை பார்ப்பதற்கு தேவையான ஜஸ்ட் படிப்புதான்… என்கிற ரீதியில் இருக்கிறது இவர் வந்து பேசுகிற காட்சிகள் எல்லாம். விஜய் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது ஆயிரம் மெசேஜ்.
நண்பன் வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு கிளம்பிய விமானத்தையே திருப்பி தரை இறங்கச் செய்து விடும் ஸ்ரீகாந்த் அலட்டலில் ஆரம்பிக்கிற படம் முழுக்க முழுக்க சிரிப்பு மழைதான். சிரிப்பு மட்டுமல்ல சிந்திக்கவும் வேண்டிய மெசேஜ்கள் வந்து போகின்றன ஃப்ரேம் பை ஃப்ரேம். தனக்குப் பிடிக்காவிட்டாலும் அப்பாவுக்காக இஞ்சினியரிங் படித்துவிட்டு பின்பு தன் அப்பாவிடம் தனக்குப் பிடித்த போட்டோகிராபியை படிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் காட்சிகள் செம டச்சிங்.
ஜீவா, ஒரு அரியர்ஸ்ம் வைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஊரு உலகத்தில உள்ள சாமி படங்களை எல்லாம் வாங்கி வைத்து பூஜை செய்கிற கேரக்டர். பின்பு, ஜீவா திருந்திவிட்ட பின்னர், அவரிடம் கேள்வித் தாளை ஜெராக்ஸ் செய்து விஜய் கொடுக்கும் போது, அதை வாங்கி கசச்கி எறிந்துவிட்டு சொல்லும் வசனமும், ஜீவா கேம்பஸ் இன்டர்வியூவில் கேள்வி கேட்பவர்களிடம் பேசும் வசனங்களுக்கும் செம க்ளாப்ஸ் போடலாம்.
கொஞ்சம் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கேரக்டரில் நடித்திருக்கிறார் இலியானா. ஒரு பாடலுக்கு கிளாமராக ஆட்டமும் போடுகிறார்.
சைலன்ஸர் கேரக்டரில் வரும் சத்யனுக்கு இது நிஜமாகவே மிகவும் பிரமாண்டமான கேரக்டர்தான். இவர் இதுவரை நடித்த படங்களில் நல்லா நடிச்ச படமும் இதுதான். இவருக்கு பெயர் வாங்கித் தரப்போகும் படமும் இதுவாகத்தான் இருக்கும்.
வைரஸ் என்னும் பெயருடன் வலம் வரும் சத்யராஜ் இன்றைய கல்லூரிகளின் சிடுசிடு மூஞ்சு டீன்களை நினைவுக்குக் கொண்டு வருகிறார். சில நிமிடங்களே வந்து செல்லும் எஸ்.ஜெ. சூர்யா படத்தில் ஒரு டர்னிங் பாய்ன்ட். அவரது அப்பாவின் அஸ்தி சொம்பை எடுத்து வைத்து கொண்டு ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் போக்கு காட்டுவது செம ரகளையான காமெடி.
படத்தில் காமெடி ரொம்ப ரொம்ப அதிகம். அதுவும் குலுங்கி குலுங்கி சிரிக்கிற அளவுக்கு இருக்கின்றன காமெடிகள். ஜீவாவின் அம்மா சப்பாத்தி போடும் போது செய்கிற மேனரிஸம் இருக்கிறதே… தியேட்டரே செம அலப்பறையாகிறது அந்த காட்சிக்கு. இதற்காகவே ரீப்பிட்டடு ஆடியன்ஸ் நிச்சயம்.
ஹரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஒரு தடவை கேட்கலாம். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஹரிஸ்.
சொந்த கதையை படமாக எடுப்பது என்றால் எப்படி வேண்டுமானாலும் எடுத்துத் தள்ளிவிடலாம். ஆனால் அதுவே இன்னொருவரது கதை என்றால், அதுவும் ஏற்கனவே வெளிவந்த படத்தை படமாக எடுப்பது என்றால் கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில்தான் எடுக்கவேண்டி இருக்கும். அதையெல்லாம் கவனமாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார் ஷங்கர். நல்ல வேளை இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் இருந்து வெளிவந்தது. வேறு ரீமேக் மன்னர்கள் கையில் சிக்கியிருந்தால் ஒருவேளை சின்னாபின்னமாகியிருந்தாலும் ஆகியிருக்கலாம். இந்த படம் ஷங்கர் டீமிற்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படம்தான்.
புதுமைகள்: முதன் முதலாக சங்கர் ரீமேக் படம் செய்வது, விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் என்று முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிப்பது, போன்ற விசயங்களைவிட இந்த அப்ரோச் தமிழுக்கு மிகவும் புதிது.
சாதகம்: அறிவுறை சொல்வது போல் சற்றே தெரிந்தாலும் சரி, படத்தில் துள்ளல் சற்றே குறைந்தாலும் சரி, இது அட்வைஸ் வகையறா படம் என்று முத்திரை குத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நிறைய நல்ல படங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. என்னதான் ஹிந்தியின் ஏற்கனவே வந்த படம் என்றாலும் அதே மிக்ஸிக் தமிழிலும் கொடுத்திருப்பது மிக நன்று. படம் முழுக்க இளமை, கலர் ஃபுல், துள்ளலுடன் இருந்தாலும், படம் முழுக்க‌ நாம் உணர முடியாத ஒரு  மென் சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். அந்த இழைதான் படத்தின் உயிர் நாடி. அது மிகைப்படாமல் பார்த்துக்கொண்டது இயக்குனரின் திறமை.
நடிகர்கள்: நடிகர்கள் எல்லோரும் ஏற்கனவே பட்டைதீட்டப்பட்டவர்கள். சத்யராஜ், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என்று எல்லோரும் அசத்துகிறார்கள். முக்கியமாக சத்யன். ஒரு சில காட்சிகளே வந்தாலும் எஸ்ஜே சூர்யா கைதட்டல்களை வாங்கிக்கொள்கிறார். ச்சே… இவ்வளவு நாள் எவ்ளோ சிறிய இடையை…ஹோ ஸாரி எவ்வோ அழகான நடிகையை மிஸ் செய்திருக்கிறோம். இலியானா கொள்ளை அழகு. இலியான தமிழுக்கு வந்தது. ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு வந்தது போல் சந்தோசமாக இருக்கிறது.
டெக்னிக்கல்: மனோஜ் பரமஹம்சாவின் கேமிராவை பற்றி சொல்லவேண்டுமென்றால் கலர் ஃபுல், கலக்கல் என்று இரண்டு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஹாரிஸின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது. ரீரிக்கார்டிங்கிலும் தூள் கிளப்பியிருக்கிறார். படத்திலிருக்கும் துள்ளல் ரீரிக்கார்டிங்கிலும் இருக்கிறது. ஆண்டனியின் கத்திரியில் இருக்கிறது நாசூக்கு.
ஒரு பார்வை: சங்கர் மற்றும் மதன் கார்க்கியின் வசனங்கள் கூர்மை ஆனால் முக்கியமான வசனங்கள் வரும் காட்சியில் சற்றே அழுத்தம் குறைவாக இருப்பது மிக குறைந்த அளவில் தெரிகிறது. பாடல் காட்சிகளில் இருக்கும் ப்ரம்மாண்டம் சங்கரின் கிளிஷேக்கள், ஆனால் அதிலும் புதுமை செய்து கைதட்டல்களை வாங்கிக்கொண்டார். லொகேசன்கள் மிக அருமை. எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதிகின்றன.
எதிர்பார்த்தது என்ன? கிடைத்தது என்ன?: படம் பற்றிய விசயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது நண்பன். சுவைமிகுந்த, கலர் ஃபுல்லான ஐஸ்கிரீமை ஊட்டி மலை உச்சியின் நின்று கொண்டு சாப்பிட்டதை போல ஒரு அருமையான அனுபவம்
நண்பன்: சங்கர், விஜய்க்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவின் கிரீடத்தில் ஒரு வைரக்கல்!
நண்பன் – இவன் எல்லோருக்கும் பிடித்த ‘நண்பன்’

0 comments:

Post a Comment