Tuesday, March 15, 2011

அரசியலுக்கு விஜய்....? - "சட்டப்படி குற்றம்"

சத்யராஜ், விக்ராந்த், பானு மற்றும் பலர் இணைந்து நடித்து இருக்கும் படம் சட்டப்படி குற்றம். இதனை விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரித்து இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளீயிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நாட்டில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் படமாக 'சட்டப்படி குற்றம்' இருக்கும். இதற்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம் என எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறினாலும். அதன் பின்னர் பேச வந்தவர்கள் விஜய் அரசியலுக்கு வரவேண்டுமா வேண்டாமா என்கின்ற தொணியில் தான் இன்றைய ஆடியோ வெளீயிட்டு விழா இருந்தது.

கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் :

விஜய்யும் எனது மகனும் 18 ஆண்டு காலமாக நண்பர்களாக உள்ளனர். விஜய்யும் எனது மகன் தான். அவரது அப்பாவிற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

சிவாஜியின் நெருங்கிய நண்பன் நான். அவர் அரசியலுக்கு வரும் பொழுது வர வேண்டாம் என்று கூறினேன். அரசியலை பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டு, அதன் பின் நடந்தது என்ன என்று உங்களுக்கே தெரியும். சிவாஜி மறைவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்பு, "அரசியல்வாதிகள் யாரும் எனது வீட்டிற்கு வர கூடாது" என்று கூறினார்.


விஜய்யின் அப்பாவான நீங்கள் அரசியலுக்கு வந்து சேவை செய்யுங்கள் தயவு செய்து விஜய்யை அரசியலுக்கு கூட்டு வராதீர்கள். நீங்கள் மக்களுக்கு சேவை செய்யுங்கள் அவர் சினிமாவிற்கு சேவை செய்யட்டும். அவர் ஹாலிவுட் நடிகராக வந்து கொண்டு இருக்கிறார்.

இயக்குனர் சீமான் :

விஜய் அரசியலுக்கு கண்டிப்பாக வர வேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வர பயப்படுவதால் தான் அரசியலில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள்.

கற்றவர்கள் அரசியலுக்கு வரவில்லை.  எவன் மண்ணையும் மக்களையும் தனது உயிர் போல் நினைக்கிறானோ அவன் தான் அரசியலுக்கு வர வேண்டும். ஆகவே விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வந்து சேவை செய்ய வேண்டும்.

நடிகர் சத்யராஜ் :

விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். சிவாஜி அரசியலுக்கு வந்து சோபிக்க வில்லை என்று சொன்னார்கள் ஏன் எம்.ஜி.ஆர் வர வில்லையா?. எம்.ஜி.ஆர் எவ்வாறு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்து சேவை ஆற்றினாரோ அதைப் போல் விஜய்யும் வர வேண்டும் .

அதற்கான ஆலோசனைகளை அவருக்கு அவரது அப்பா எப்போதோ கற்றுக் கொடுத்து விட்டார். அதனை அடுத்து, சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் கொஞ்சம் கற்றுக் கொடுத்து இருப்பார். அதனால் தான் இது வரை அமைதியாக இருந்து வந்த விஜய் நாகப்பட்டினத்தில் போய் "உலக வரைப்படத்தில் இலங்கை நாடே இல்லாமல் போய்விடும்" என்று பேசி இருக்கிறார்.

இந்த படத்தை பார்த்து விட்டு தாணு எனக்கு போன் பண்ணினார். 'நன்றாக இருக்கிறது. நீங்கள் நடித்த பாத்திரத்தில் மட்டும் விஜய் நடித்து இருந்தால் இத்திரைப்படம் வெளிவந்த உடன் கண்டிப்பாக தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வந்து இருப்பார்' என்றார். அதற்காக தான் சீமான், நீங்கள், விஜய் இணையும் பகலவன் படம் இருக்கிறதே!

மொத்தத்தில் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று அனைவரும் பேசினாலும், அவர் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாரோ?.


0 comments:

Post a Comment