Saturday, September 10, 2011

ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜீத்துக்கு அழைப்பு: நடிகர் சங்க பொதுக்குழு நாளை கூடுகிறது: உறுப்பினராகாத நடிகைகளுக்கு தடை


நடிகர் சங்க பொதுக்குழு நாளை காலை 10.30 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடக்கிறது. தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுவதால் முதல் தடவையாக சங்க வளாகத்துக்கு வெளியே இப்பொதுக்குழு கூடுகிறது.
 
நடிகர் சங்கத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவருக்கும் பொதுக்குழுவில் தவறாது கலந்து கொள்ளும்படி வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
 
ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜீத், விஷால், பரத், ஜீவா, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் பொதுக்குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
 
இப்பொதுக்குழுவில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சினையில் மோதல் போக்கு உருவாகி உள்ளது. இதனால் புதுப்படங்களுக்கு பூஜை போட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை நடிகர், நடிகைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. புதுப்படங்களில் நடிக்க முடியாமல் பலர் வீட்டில் இருக்கின்றனர். இப்பிரச்சினை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.
 
நடிகர், நடிகைகள் அனைவரும் நடிகர் சங்கத்தில் கண்டிப்பாக உறுப்பினராக வேண்டும் என்று நடிகர் சங்கம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. ஆனாலும் வடக்கில் இருந்து வந்த புது நடிகைகள் இன்னும் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. உறுப்பினராகாதவர்களுக்கு நடிக்க தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
 
நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் போன்றோர் வற்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளது.

0 comments:

Post a Comment