Sunday, September 4, 2011

தீர்ந்தது விஜயின் பிரச்சினை


தன்னை கடவுளுடன் ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட்டீஸுகளோ வெளியிட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், 'வேலாயுதம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால், என்ன கடவுளாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள்.

அதைப்பார்த்த அடுத்த வினாடியே ரசிகர்களை அழைத்து, ``இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. அதை அகற்றி விடுங்கள்'' என்று கண்டிப்புடன் கூறினேன். என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் உடனே அதனை அகற்றி விட்டனர்.

இனி இப்படி செய்ய மாட்டோம் என்றும் உத்தரவாதம் தந்தார்கள்.   முடிந்து போன இந்த விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது.

நான், சாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். ஆயிரம் பேர்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன சாதி- மதம் என்று எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்கம் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்ன சாதி-மதம் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ், தமிழினம் ஒன்றேதான்.   ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி, வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட்டீசுகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார்.

1 comments:

விஜய் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருவரும் அஜீத் மகள் அனோஷ்காவுடன் நல்ல நட்பு வைத்திருக்கின்றனர். ஸ்கூல் இல்லாத நேரங்களில், அவர்கள் ஒருவரது வீட்டுக்கு இன்னொருவர் அம்மாவின் துணையுடன் சென்று, விளையாட்டில் கவனம் செலுத்துகின்றனர். (தினகரன் வசந்தம் 4.9.2011 பக்கம் 23)...அடடடடா...இது ஒரு முக்கியமான செய்தி...இதற்கு இடம் சுட்டி பொருள் விளக்கணுமான்னு கேட்க வேணாம்...முகநூலில்...மங்காத்தா மொக்கன்னு ஒரு கோஷ்டியும்...வேலாயுதம் மொக்கன்னு இன்னொரு கோஷ்டியும் நேரத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்குது. இந்த விஜயும், அஜீத்தும், `யாருடா தல'ன்னு வசனம் பேசியும், `உனக்கென்ன'ன்னு பாட்டு பாடியும் தங்கள் சின்ன புள்ள தனத்த காட்டன டைம்லாம் முடிஞ்சிடுச்சி. இப்ப அவங்களுக்கு அறிவு வந்திடுச்சி... உங்களுக்கு? (சினிமா பாருங்க...என்ஜாய் பண்ணுங்க..ஒரு சினிமாவுக்கு மூணு மணி நேரத்த மட்டும் செலவிடுங்க...மூணு மாசத்த வீணாக்காதிங்க)

Post a Comment