Friday, October 28, 2011

வேலாயுதம் - விமர்சனம்


குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி நாட்டை சீர்குலைக்க ஊடுரவும் தீவிரவாதிகளுடன் மோதும் இளைஞன் கதை...
 
ஜய்யின் ஆக்ஷன் பார்முலா இயக்குனர் எம்.ராஜாவின் அழுத்தமான கதையாக்கம் பிரமாண்ட காட்சி கலவையுடன் படம் விறுவிறுப்பாய் எகிறுகிறது...
 
கதை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் துவங்குகிறது. தமிழக உள்துறை மந்திரியை தீவிரவாதிகள் கடத்தி செல்லும் ஹெலிகாப்டர் அங்கு இறங்குகிறது. அவர்களிடம் மந்திரி மண்டியிட்டு சென்னையில் குண்டு வெடிப்புகள் நடத்த உதவுதாக வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவுகின்றனர்.
 
மந்திரி தயவில் நடக்கும் கள்ள நோட்டு அச்சடிப்பு இளம்பெண் கடத்தல் என சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலை பத்திரிகை நிருபர் ஜெனிலியா வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். அவரை ரவுடிகள் பிடித்து குத்தி சாய்க்கின்றனர்.
 
ஜெனிலியாவின் இரு கூட்டாளிகளை கொல்கின்றனர். அதிர்ஷ்டவசமாய் உயிர் பிழைக்கும் ஜெனிலியா தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு சதியை கண்டு பிடித்து அதை கடிதமாக எழுதி வைக்கிறார். குண்டு வெடிப்பை தடுப்பேன் என உறுதி அளித்து கீழே வேலாயுதம் என கையெழுத்து போட்டு விட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேருகிறார்.
 
கிராமத்தில் பால் விற்கும் தொழில் செய்யும் வேலாயுதமான விஜய் தங்கை சரண்யாமோகன் திருமணத்துக்காக சீட்டு கட்டி சேர்த்து வைத்த பணத்தை வாங்க சென்னையில் உள்ள சிட்பண்ட் நிறுவனத்துக்கு வருகிறார். அப்போது ரெயில் நிலையத்தில் தீவிரவாதிகள் பதுக்கிய வெடிகுண்டு மோட்டார்சைக்கிளில் ஏறி திருடனை விரட்டி போய் வெளியில் நிறுத்த அங்கு வெடிக்கிறது.
 
பயணிகள் காப்பாற்றப்படுகின்றனர். இது போல் கூட்டம் கூடும் பகுதியில் இருக்கும் இன்னொரு வெடிகுண்டு சூட்கேசை எடுத்து தவறி விட்டு போனதாக நினைத்து அதை வைத்தவரிடமே கொண்டு கொடுக்க அங்குள்ள ரவுடி கும்பல் வெடித்து சிதறுகின்றனர். உருவம் தெரியாத வேலாயுதத்தை மக்கள் கடவுளாக கொண்டாடுகிறார்கள்.
 
ஜெனிலியாவுக்கு விஷயம் தெரிகிறது. விஜய்யிடம் மக்கள் அவரை வேலாயுதமாக கருதுவதை உணர்த்துகிறார். நிஜமாகவே வேலாயுதமாக மாறி தீவிரவாதிகளை அழிக்க நிர்ப்பந்திக்கிறார். ஒரு கட்டத்தில் தான் பணம் போட்ட கம்பெனியை மூடி அங்கிருந்த பணத்தை மந்திரி ஆட்கள் சுருட்டுகின்றனர். பணத்தை இழந்த மக்கள் வேலாயுதம் வந்து எங்களுக்கு பணத்தை வாங்கி கொடுப்பார் என நம்பிக்கை குரல் எழும்புகின்றனர். அதன் பிறகு விஜய் எடுக்கும் வேலாயுதம் அவதாரமும் தீவிரவாதிகளுடன் நடக்கும் சண்டைகளும் மீதி கதை...
 
காமெடி, சென்டி மென்ட், ஆக்ஷனில் விஜய்யை இன்னொரு தளத்துக்கு தூக்கியுள்ள படம். தங்கை பாசத்தில் சிக்சர் அடிக்கிறார். கோழி பிடிக்க வீட்டு கூரைகளில் தாவி குதித்து ஓடி ஒவ்வொரு வீட்டுக்காரையும் இம்சை படுத்துவது... கிணற்றில் விழுந்த தங்கை மோதிரத்தை எடுக்க உள்ளே தங்கம் இருப்பதாக சொல்லி ஊர்க்காரர்களை தண்ணீர் இறைக்க வைத்து மோதிரத்தை கண்டு பிடித்து கம்பி நீட்டுவது... தங்கை சமைத்த ருசி இல்லாத உணவை நண்பர்களுடன் சாப்பிட்டு புகழ்வது.. என காமெடியர்களை தூக்கி சாப்பிடும் காமெடி பண்ணுகிறார்.
 
வேலாயுதம் ஆன பின் கதை ஆக்ஷன் ரூட்டுக்கு தாவுகிறது. சிட்பண்ட் பணத்துடன் ஓடும் ரவுடிகளை கடற்கரை யோரம் மோதி அழித்து கடலுக்குள் வீசுவது வேகம்.. ரெயிலை தீவிரவாதிகள் கடத்தி தொழிற் சாலையில் மோத விட்டு விஷ வாயுவை பரப்பி மக்களை கொல்ல முயற்சிப்பதும் விஜய் அதை தடுக்க ஆக்ரோஷமாக மோதுவதும் ஹாலிவுட்டுக்கு இணையான பிரமிப்பு.
 
விஜய்யின் முறைப்பெண் ஹன்சிகா கிராமத்து தேவதை. பத்திரிகை நிருபர் கேரக்டரில் ஜெனிலியா வலு சேர்க்கிறார். சரண்யா மோகன் பாசக்கார தங்கை. ஊர்க்காரர்களை காப்பாற்ற அவர் செய்யும் தியாகம் உலுக்குகிறது. திருடனாக வரும் சந்தானம் காமெடி கலகலப்பின் உச்சம். மகள் காதலுக்கு உதவும் எம்.எஸ்.பாஸ்கர் சிரிக்க வைக்கிறார். ரெயில் சண்டைக்கு பின் கதை நீள்வதை குறைத்து இருக்கலாம். கமர்சியல் கதையை விறு விறுப்பாக காட்சிப்படுத்தி ஒன்ற வைக்கிறார் இயக்குனர் ராஜா. பிரியன் கேமராவில் பிரமாண்டத்தின் பதிவு. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். 

0 comments:

Post a Comment